http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 143

இதழ் 143
[ அக்டோபர் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

அப்பர் என்னும் அரிய மனிதர் - 3
அரங்கநாதபுரம் திருவானேசுவரர்
அவர் போல்தான்! ஆனால் அவரில்லை!
அரங்கத்தின் ஆடற்சிற்பங்கள் இரண்டு
கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்
திருவித்தியாசக்குடி
இதழ் எண். 143 > கலையும் ஆய்வும்
அரங்கத்தின் ஆடற்சிற்பங்கள் இரண்டு
மு. நளினி
ஆய்வாளர் திருமதி அ. செல்வி திருவரங்கம் கோயில் ரெங்க விலாச மண்டபத் தூண்களில் தாம் கண்டு வியந்த இரண்டு ஆடற்சிற்பங்களின் ஒளிப்படங்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். நாயக்கர் கால ஊரக ஆடற்கலையைப் படம்பிடிக்கும் அச்சிற்பங்கள் ஒத்த படப்பிடிப்புகள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் பதிவாகியுள்ளன.

குடக்கூத்து

நாட்டியசாத்திரம் வகைப்படுத்தும் உடல்நிலைகளுள் ஒன்றான வைஷ்ணவத்தில் (வைசாக மாகவும் கொள்ளமுடியும்) இரண்டு பாதங்களையும் பார்சுவத்தில் இருத்தி ஆடும் நங்கையின் இடக்கை முழங்கையளவில் மடங்கி சூசியில் உள்ளது. கணுக்கால்கள் வரை இறங்கியுள்ள மெலிதான இடுப்பாடையின் இடைமடிப்பு தற்போதைய பரதநாட்டியக் கீழுடை போல் விசிறி மடிப்பாய் அமைய, இடுப்பைச் சுற்றித் தாழும் முத்துச்சரம் அந்த இடைமடிப்பைத் தழுவியுள்ளது. தோளிலிருந்து இருபுறத்தும் நெகிழ்ந்திறங்கும் நீள்மடித்துண்டின் வலப்பகுதியை ஆடுநரின் வலக்கை பற்றியிருக்க, அவரது தலைமுடி இழைகளாகப் பின்னப்பட்டு நன்கு சுருட்டிய நிலையில் உச்சிக்கொண்டையாகியுள்ளது.



இலேசான இடஒருக்கணிப்பில் முகத்தை இடத்திருப்பமாக்கி சற்றே வலச்சாய்வில் ஆடும் அந்நங்கையின் கழுத்தில் சரப்பளி, மார்பகங்களுக்கிடையில் இறங்கி வளையும் முத்துமாலை. உயரமாகவும் ஒடுங்கிய இடை கொண்டவராகவும் உள்ள அவரது வலக்கைக்கும் சற்றே உயர்த்திய இடுப்பின் வலப்பகுதிக்கும் இடையில் கிடைநிலையில் குடம். சோழர் காலக் குடக்கூத்து கரகாட்டமாக மாறிய படிநிலைகளில் ஒன்றாக இதைக் கொள்ளலாம். திருச்சத்திமுற்றம் சிவன்கோயில் தூணொன்றில் குடத்தைத் தலையில் வைத்து ஆடும் பெண்ணின் சிற்பம் உள்ளமை இங்கு எண்ணத்தக்கது. ஆடுநர்களின் ஒப்பனைக்கலை காலந்தோறும் மாறி வந்திருப்பதையும் இச்சிற்பம் புலப்படுத்துகிறது.

கத்திக்கூத்து

அரங்கத்தின் அதே மண்டபத்தில் செல்வியின் கவனத்தைக் கவர்ந்த மற்றொரு சிற்பம் ஆடவர் ஆடலாக, கத்திக்கூத்தின் ஒருவகையாக அமைந்துள்ளது. பிற்சோழர் காலத்திலிருந்தே கத்திக்கூத்துச் சிற்பங்களைக் காணமுடிகிறது. தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அரங்க ஆடலர் ஆலீடமாகக் கொள்ளத்தக்க உடல்நிலையில் வலப்பாதத்தைப் பார்சுவத்திலும் இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் நிறுத்தி, உடலின் மேல், கீழ்ப்பகுதிகளை எதிரெதிர்த் திசைச் சுழற்சிகளில் இயக்கி ஆடல் வல்லமை காட்டுகிறார். அவரது தலைக்கு மேல் உயர்த்திய வலக்கையில் வளைந்த கத்தி. இடக்கை மீசையை முறுக்குமாறு முகத்தருகே.



பனையோலைக் குண்டலங்கள், கைவளைகள் அணிந்துள்ள அவரது சிற்றாடையை இடைப்பட்டை இடுப்பில் இருத்த, தோளில் தவழும் பெருந்துண்டு வலப்புறம் நெகிழ, கழுத்தைச் சுற்றி முழங்கால்கள் வரை மாலையெனத் தொங்கும் அழகணி, நடுவில் பேரகலப் பதக்கம் பெற்றுள்ளது. கணுக்கால்களில் தோல்பட்டை. வலஒருக்கணிப்பில் உடலும் இடத்திருப்பமாய் முகமும் இருவேறுபட்ட திசைகளில் சுழல, இடத்தோளில் அவர் மாட்டியிருப்பது ஒரு வாய் அகலமாகவும் மற்றொரு வாய் குறுகியும் உள்ள ஊதுகொம்பு. பழங்குடி மக்கள் அருங்காட்சியகங்களில் இது போன்ற காற்றிசைக் கருவிகளைக் காணமுடிகிறது.

நாயக்கர் காலச் சிற்பங்களைப் பற்றிய பதிவுகள் ஓரளவிற்கு நிகழ்ந்துள்ளன. ஆனால், அக்காலக்கட்ட ஆடல்கள் பற்றிய ஆய்வுகள் பரவலாகவில்லை. அவை விரிவான பார்வைக்குள்ளாவது ஆடற்கலையில் நிகழ்ந்த மாற்றங்களையும் புத்திணைப்புகளையும் தொகுக்கத் துணையாகும். அவ்வகையில் ஆய்வாளர் செல்வியின் இந்தப் படங்கள் ஒரு தொடக்கத்தைத் தந்திருப்பதாகக் கொள்ளலாம்.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.